search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக வலைதளம்"

    • சில வசனங்களை சேர்த்து அவர்கள் வெளியிட்ட அந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மெலட்டூர் போலீசார், முகம்மது ரியாஸ் உள்ளிட்ட 5 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அதிக லைக் பெறுவதற்காக, அதில் கணக்கு வைத்திருக்கும் பலர் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுகின்றனர். அதிக லைக் வாங்குவதற்காக சிலர் பிரச்சினைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு, சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

    அதுபோன்ற ஒரு நிகழ்வு கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொடு வன்னிக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் முகம்மது ரியாஸ்(வயது25), முகம்மது ஹலாஸ்(22) சலீம்(20), முகம்மது ஜாசிம்(19), சல்மானில் பாரிஸ்(19). இவர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கணக்கு வைத்துள்ளனர்.

    அதில் வித்தியாசமாக வீடியோ வெளியிட்டு அதிக லைக்குகளை வாங்க திட்டமிட்ட அவர்கள், மலப்புரம் போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீசுவது போன்றும், அதில் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனம் தீப்பிடித்து எரிவது போன்றும், போலீஸ் நிலையம் சேதமடைவது போலவும் காட்சியை உருவாக்கி இன்ஸ்டாகிராம் மற்றும் யு-டியூப்பில் பதிவிட்டனர்.

    விசுவல் எபக்ட் மற்றும் சில வசனங்களை சேர்த்து அவர்கள் வெளியிட்ட அந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த மெலட்டூர் போலீசார், முகம்மது ரியாஸ் உள்ளிட்ட 5 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள் வாங்குவதற்காகவே அவ்வாறு வீடியோவை உருவாக்கி, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்தது அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது வன்முறையை தூண்டுதல், சமூக வலைதளங்கள் மூலம் காவல்துறையை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. பின்பு 5 வாலிபர்களையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

    • மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டது.
    • ரெயில்வே தண்டவாளத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று நடந்து சென்றது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் காலை 7.10 மணியளவில் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டது. பயணிகள் வனங்களை ரசித்தபடியும், இயற்கை நீர்வீழ்ச்சிகளை பார்த்த படியும் ரெயிலில் பயணித்து கொண்டிருந்தனர்.

    ஹில்குரோவ் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே தண்டவாளத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று நடந்து சென்றது. மேலும் ரெயிலை நோக்கியும் யானை வந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதற்கிடையே மலை ரெயிலில் பயணித்தவர்கள், தண்டவாளத்தில் காட்டு யானை நிற்பதை பார்த்து அச்சம் அடைந்தனர்.

    இருப்பினும் யானையை பார்த்த ஆர்வத்தில், ரெயிலில் இருந்தபடி அங்கு சுற்றி வந்த காட்டு யானையை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    இதற்கிடையே யானை ரெயிலை மறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் யானை அந்த இடத்தை விட்டு நகரவில்லை. 10 நிமிடத்துக்கு பிறகு மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் திரும்பி சென்றது. அதன்பிறகு மேட்டுப்பாளையம் மலை ரெயில் மீண்டும் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.

    இந்த நிலையில் யானை ரெயிலை மறித்த வீடியோவை பயணிகள் சிலர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடவே தற்போது அது வைரலாகி வருகிறது.

    • வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    • செல்போனில் ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் சமூக வலைதளமான யூ-டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

    மேலும் அதனை தங்களது முகநூல் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக பதிவு செய்திருந்தனர். அந்த வீடியோவில் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி அவர்கள் வீசி ஒத்திகை பார்ப்பது போல் காட்சிகள் பதிவிடப்பட்டிருந்தது. மேலும் சமுதாய ரீதியிலான ஒரு பாடல் அதில் ஒலிக்க, கையில் அரிவாளுடன் 3 பேரும் நடனம் ஆடிய வீடியோவும் இருந்தது.

    இது தொடர்பாக வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபர்கள் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களது செல்போனில் ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • அஸ்மிதா என்ற அந்த பெண் ஊழியரின் பெற்றோர் விமானத்தில் பயணம் செய்வதற்காக ஏறுகின்றனர்.
    • பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    ஸ்பைஸ் ஜெட் விமான பணிப்பெண்ணின் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில், அஸ்மிதா என்ற அந்த பெண் ஊழியரின் பெற்றோர் விமானத்தில் பயணம் செய்வதற்காக ஏறுகின்றனர்.

    அவர்களின் டிக்கெட்டுகளை அவர்களது மகள் அஸ்மிதா புன்னகையுடன் சரிபார்த்து அவர்களை இருக்கைக்கு அழைத்து செல்வது போல் வீடியோ தொடங்குகிறது. பின்னர் பெற்றோரை முன்வரிசையில் அமர வைத்து பேசும் காட்சிகள் காண்போர்கள் மனதை கவரும் வகையில் உள்ளது. உணர்ச்சிகரமான இந்த வீடியோ 1.6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரின் கண்களிலும் மகிழ்ச்சியை காண முடிகிறது என குறிப்பிட்டுள்ளார். இதுபோல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • பாகிஸ்தானின் கராச்சி நகரில் திருமண விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
    • மணமகன் அர்பாஸ் குடும்பத்தினருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் முகமது அர்பாஸ். இவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவரும் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த இளம்பெண் அமீனாவும் சமூக வலைதளம் மூலமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் நடத்த அவர்கள் திட்டமிட்டனர்.

    பாகிஸ்தானின் கராச்சி நகரில் திருமண விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே மணமகன் அர்பாஸ் குடும்பத்தினருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக திருமணம் செய்ய திட்டமிடப்பட்டது.

    பாகிஸ்தான் சென்று திருமணம் செய்தால் அது இந்தியாவில் செல்லாது என்பதால் இந்தியாவில் இருந்தபடியே அமீனாவை மணமுடிக்க அர்பாஸ் திட்டமிட்டார்.

    அதன்படி காணொலி வாயிலாக முஸ்லிம் முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றன. ராஜஸ்தானின் ஜோத்பூரில் மணமகன் அர்பாசும் பாகிஸ்தானின் கராச்சி நகரில் மணமகள் அமீனாவும் அமர்ந்திருக்க இரு வீட்டாரின் ஆசியோடு திருமணம் நடத்தப்பட்டது.

    மணமகன் அர்பாசின் தந்தை முகமது அப்சல் கூறும்போது, "எங்களது உறவினர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். அந்த உறவு இன்றளவும் நீடிக்கிறது. மணமகள் விசாவிற்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அது தாமதமானது. எனவே, ஆன்லைன் முறையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தோம். அண்டை நாடுகளுக்கு இடையே இதுபோன்ற திருமணங்கள் புதிதல்ல.

    கடந்த காலங்களில் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் திருமணங்கள் நடைபெற்று உள்ளன. கொரோனா தொற்றுநோய் பாதிப்பு காலத்திலும், 2 நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமாக இருந்தபோதிலும் இதுபோன்ற திருமணங்கள் நடந்தன. நாங்கள் முறைப்படி விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்று எங்கள் மருமகளை இந்தியாவுக்கு அழைத்து வருவோம்" என்றார்.

    மணமகன் அர்பாஸ் கூறுகையில், "பாகிஸ்தானில் திருமணம் செய்தால் இந்தியாவில் செல்லாது. இப்போது இந்தியாவில் இருந்தபடியே ஆன்லைனில் திருமணம் செய்திருப்பதால் எங்களது திருமணம் செல்லும்" என்றார். ஆன்லைனில் சட்டப்பூர்வமாக திருமணம் நடைபெற்றிருப்பதால் இந்திய, பாகிஸ்தான் தரப்பில் எளிதில் விசா கிடைக்கும் என்று அர்பாஸ்-அமீனாவின் உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜோத்பூரைச் சேர்ந்த முசம்மில் கான், பாகிஸ்தானைச் சேர்ந்த உருஜ் பாத்திமாவை ஆன்லைன் மூலம் திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிக்கும் சீமா ஹைதர் , ரபுபுரா பகுதியில் வசிக்கும் தனது இந்திய காதலன் சச்சின் மீனாவுடன் வசிக்க கடந்த மே 13-ந் தேதி நேபாளம் வழியாக தனது 4 குழந்தைகளுடன் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தார். இதையடுத்து சீமா கைது செய்யப்பட்டார். சச்சின் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர்கள் இருவரும் ஜூலை 7-ந் தேதி உள்ளூர் நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்று ரபுபுராவில் வசித்து வருகின்றனர். சமீபத்தில், பாகிஸ்தானின் பழங்குடியினரான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அப்பர் டிர் மாவட்டத்தில் உள்ள நஸ்ருல்லா (24) என்பவரை 34 வயதான திருமணமான இந்தியப் பெண்ணான அஞ்சு, பாகிஸ்தானுக்கு சென்று திருமணம் செய்து கொண்டார்.

    இந்த திருமணங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 2 நாடுகளைச் சேர்ந்த மற்றொரு ஜோடி எந்தவித சலசலப்பும் இன்றி இருவரது குடும்பத்தினரின் ஆசியோடு ஆன்லைனில் திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மரத்தை சிறிது அளவு வெட்டிய போது வெட்டுப்பட்ட இடத்திலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது .
    • மரத்திலிருந்து கொட்டிய தண்ணீர் சுத்தமாகவும் குடிப்பதற்கு சுவையாகவும் இருப்பதாக கூறினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் போடு ராஜு துரு கிராமம் அருகே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று பொதுமக்கள் விறகு சேகரிக்கச் சென்றனர்.

    அப்போது அங்குள்ள ஒரு மரத்தை வெட்டினர். மரத்தை சிறிது அளவு வெட்டிய போது வெட்டுப்பட்ட இடத்திலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது .தொடர்ந்து தண்ணீர் நிற்காமல் அதிக அளவு வெளியேறியது.

    பொதுமக்கள் அந்த தண்ணீரை பிடித்து குடித்தனர். தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பதாக தெரிவித்தனர். சிலர் குடங்கள் மற்றும் பாத்திரங்களில் தண்ணீரை பிடித்து சென்றனர் .

    அந்த மரத்திலிருந்து கொட்டிய தண்ணீர் சுத்தமாகவும் குடிப்பதற்கு சுவையாகவும் இருப்பதாக கூறினர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

    • பாம்புகள் குறித்த வீடியோக்களை பயனர்கள் அதிகம் பார்ப்பார்கள்.
    • வனப்பகுதிக்குள் ஒரு ராஜநாகத்தின் வாலை பிடித்து சீண்டுவது போன்ற காட்சிகள் உள்ளன.

    சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும், அவற்றில் பாம்புகள் குறித்த வீடியோக்களை பயனர்கள் அதிகம் பார்ப்பார்கள். அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ராஜநாகத்தை வாலிபர்கள் 2 பேர் சீண்டும் காட்சிகள் பதற வைக்கிறது.

    இன்ஸ்டாகிராமில் '@டி_ஸ்ரேஸ்தா10' என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில் 2 இளைஞர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஒரு ராஜநாகத்தின் வாலை பிடித்து சீண்டுவது போன்ற காட்சிகள் உள்ளன.

    ஒரு வாலிபர் முதலில் ராஜநாகத்தின் வாலை பிடித்து இழக்கவும் அது அவரை கொத்த முயல்கிறது. அப்போது மற்றொரு வாலிபர் அந்த ராஜநாகத்தின் வாலை பிடித்து சீண்டுவது போல உள்ள காட்சிகள் பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரீல்ஸ் வீடியோவுக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • டுவிட்டர் வலைதளத்தில் கிரியேட்டர்கள் வருவாய் ஈட்டுவதற்கு புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
    • உலகளவில் டுவிட்டர் வருவாய் பங்கீட்டு திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

    எலான் மஸ்கின் X, முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த சமூக வலைதளத்தில் பயனர்கள் வருவாய் ஈட்டுவதற்கான புதிய திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் டுவிட்டர் அல்லது X புளூ சந்தா வைத்திருப்போருக்கு உலகளவில் வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் பயனர்கள் இந்த திட்டத்தின் கீழ் வருவாய் ஈட்ட முடியும்.

    அந்த வகையில், புதிய X தளத்தில் வருவாய் ஈட்டுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும். இதற்கு கிரியேட்டர்கள் மற்றும் பயனர்கள் வைத்திருக்க வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    1 - பயனர்கள் X புளூ சந்தா வைத்திருப்பது அவசியம் ஆகும். இதோடு கடந்த 15 மாதங்களில், பதிவுகளுக்கு குறைந்தபட்சம் 15 மில்லியன் இம்ப்ரஷன்கள் வந்திருப்பது அவசியம் ஆகும். குறைந்தபட்சமாக 500 ஃபாளோவர்கள் இருக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.

     

    2 - அனைத்து X புளூ மற்றும் வெரிபைடு நிறுவன சந்தா வைத்திருப்போருக்கு இந்த வழிமுறைகள் அனைத்தும் மிகவும் எளிமையாக்கப்பட்டு உள்ளன. வருவாய் ஈட்டுவதற்கு தேவையானவற்றை பூர்த்தி செய்துவிட்டால், இந்த திட்டத்தில் இணைந்து கொண்டு, வருவாய் 50 டாலர்களை கடந்தபிறகு அவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

    3 - எதன் அடிப்படையில் வருவாய் பங்கீடு வழங்கப்படுகிறது என்பது பற்றி X தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருப்போருக்கு ஜூலை 31-ம் தேதியிட்ட வாரத்தில் இருந்து வருவாய் வழங்கும் பணிகள் துவங்கப்படுகிறது.

     

    4 - இந்த திட்டம் மிகவும் வெளிப்படையான ஒன்று என்றும், இதில் அனைத்து X புளூ மற்றும் வெரிபைடு நிறுவன வாடிக்கையாளர்கள் பங்கேற்று பயன்பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் மற்றும் கிரியேட்டர்கள் விளம்பர வருவாய் பங்கீடு மற்றும் கிரியேட்டர் சந்தா முறைகளை (Ads Revenue Sharing and Creator Subscriptions) செட்டப் செய்து கொள்ள வேண்டும்.

    5 - புதிய வருவாய் ஈட்டும் திட்டத்தின் கீழ் பணத்தை பெறுவதற்கு ஸ்டிரைப் அக்கவுன்ட் வைத்திருப்பதும் அவசியம் ஆகும். பயனர்கள் இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவதை தவிர்க்க, இந்த திட்டத்திற்கான விதிகளை முழுமையாக அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. 

    • பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினார்கள்.
    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    சென்னை வடபழனியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    அவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் நேரில் சந்தித்து பேசினார்கள். இந்நிலையில் வீட்டிலிருந்த மாணவி மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.

    ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினார்கள். அப்போது மாணவி வாலிபருடன் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து மாணவியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக அவர் செல்போனில் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். இதனால் அவரை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. ஒரு மாதமாக தேடியும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மாணவி, தனது தோழி ஒருவருக்கு செல்போனில் பேசினார். அவர் தனது தோழியிடம் காதலனை நம்பி வந்ததாகவும் அவர் தனது நகையை விற்று செலவு செய்து விட்டு, தற்பொழுது கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும் பக்கத்து வீட்டு பெண் ஒருவரின் செல்போனை வாங்கி பேசுவதாக கூறியதுடன் தான் குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தன்னால் கூற இயலவில்லை. எனவே பெற்றோரிடம் தெரிவித்து தன்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசினார். இதையடுத்து மாணவியை அவரது தோழி சமாதானம் செய்தார். மேலும் மாணவியின் பெற்றோரிடம் நடந்த சம்பவத்ததையும் கூறினார். அவர்கள் இந்த தகவலை போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர்.

    உடனே சென்னை போலீசார், வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாணவியை மீட்க வடசேரி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மாணவி கூறிய தகவலின் அடிப்படையில் வடசேரி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மாணவி இருந்தது தெரிய வந்தது. அவரை மீட்ட போலீசார், அங்கு இருந்த வாலிபரையும் பிடித்தனர். மீட்கப்பட்ட மாணவியையும் அந்த வாலிபரையும் போலீசார் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    மாணவி மீட்கப்பட்டது குறித்த தகவல் சென்னை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அவர்கள் மாணவியின் பெற்றோரை அழைத்துக் கொண்டு இன்று காலை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவியுடன் சமூக வலைதளம் மூலமாக பழகி தனது நண்பர் ஒருவரது ஏற்பாட்டில் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்ததாகவும் நாகர்கோவிலில் வாடகை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் வாலிபர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற தகவலும் தெரியவந்தது.

    மாணவிக்கு 17 வயதே ஆவதால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வடசேரி வாடகை வீட்டில் மீட்கப்பட்ட மாணவியை போலீசார் நேற்று இரவு விசாரணைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இன்று காலை மீண்டும் மாணவி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது சென்னையில் இருந்து போலீசாரும் மாணவியின் பெற்றோரும் அங்கு வந்தனர். மாணவி அவரது பெற்றோரை பார்த்ததும் கதறி அழுதார். இதையடுத்து அவர்கள் அவரை சமாதானம் செய்தனர். வாலிபரை நம்பி எனது வாழ்க்கையை இழந்து விட்டேன் என்று கூறி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    வடசேரியில் வாடகை வீட்டில் மீட்கப்பட்ட மாணவிக்கு 17 வயதே ஆவதால் அந்த மாணவியரிடம் குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. மீட்கப்பட்ட மாணவியிடம் நடந்த சம்பவத்தை அவர்கள் கேட்டறிந்தனர். விசாரணையின் போது அவரது பெற்றோர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • சிறுவர்-சிறுமிகளின் பல்வேறு திறமைகளை வீடியோக்கள் மூலம் காண முடிகிறது.
    • பயனர்கள் சிறுவனின் திறமையை பாராட்டுவதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

    இளம் தலைமுறையினரின் திறமைகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் சமூக வலைதளங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இதில் சிறுவர்-சிறுமிகளின் பல்வேறு திறமைகளை வீடியோக்கள் மூலம் காண முடிகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் சிறுவனின் ஆபாரமான வில் வித்தை திறமை பயனர்களை வியக்க வைத்துள்ளது. ருத்ரபிரதாப் சிங் என்ற அந்த சிறுவன் உடலை வளைத்து கொண்டு காலால் வில்லை எடுக்கிறான். பின்னர் ஜிம்னாஸ்டிக் நிலையில் வில் மற்றும் அம்புகளை தூக்கி இலக்கை நோக்கி அம்பை வெற்றிகரமாக எய்வது போன்ற காட்சிகள் பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ 1.68 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றுள்ளது. தொடர்ந்து வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் பயனர்கள் சிறுவனின் திறமையை பாராட்டுவதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

    • புதுமண ஜோடியுடன் விருந்தினர்களும் சேர்ந்து ஸ்கை டைவிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டது பார்ப்பவர்களை வேடிக்கையாக இருந்தது.
    • புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    வாழ்நாளில் ஒரு முறை நடைபெறும் திருமணத்தை மறக்க முடியாத கொண்டாட்டமாக மாற்றுவதற்கு சிலர் திட்டமிட்டு விழா போல கொண்டாடுவார்கள். சிலர் மிகவும் எளிமையாக திருமணத்தை நடத்தி விடுவார்கள். சிலர் முற்றிலும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்வார்கள். அந்த வகையில் 'ஸ்கை டைவிங்' செய்து திருமணத்தை கொண்டாடிய புதுமணத் தம்பதியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், பிரிசில்லா ஆன்ட்-பிலிப்போ லெக்வெர்ஸ் என்ற புதுமணத் தம்பதி தங்களது திருமணத்தை விருந்தினர்களுடன் சேர்ந்து 'ஸ்கை டைவிங்' செய்து சாகச கொண்டாட்டமாக மாற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. வீடியோவின் தொடக்கத்தில் புதுமணத் தம்பதி ஒரு உயரமான குன்றின் மேல் இருக்கின்றனர். அவர்கள் தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் குன்றில் இருந்து கீழே 'ஸ்கை டைவிங்' செய்து கொண்டாடுகிறார்கள்.

    புதுமண ஜோடியுடன் விருந்தினர்களும் சேர்ந்து ஸ்கை டைவிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டது பார்ப்பவர்களை வேடிக்கையாக இருந்தது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர், இந்த வீடியோவை மிகவும் விரும்புகிறேன். என் திருமணத்தில் இதை செய்ய விரும்புகிறேன். ஆனால் நான் மிகவும் பயப்படுகிறேன். புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    • காரின் உட்புறத்தில் அவர் படுக்கையாக மாற்றுவதை காட்டும் காட்சிகள் உள்ளது.
    • கார் படுக்கையில் 2 பேர் சவுகரியமாக உறங்கும் அளவுக்கு இடம் இருப்பதை காணமுடிகிறது.

    சில நபர்கள் வேடிக்கையாக செய்யும் செயல்கள் சமயத்தில் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் யூடியூப்பில் தீபக் குப்தா என்பவர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    அதில் அவரது மாருதி காரின் உட்புறத்தில் அவர் படுக்கையாக மாற்றுவதை காட்டும் காட்சிகள் உள்ளது. அவர் கரடுமுரடான நிலப்பரப்பில் முகாமிடுவதற்கும், பயணிப்பதற்கும் ஏற்றவகையில் காரின் உட்புறத்தில் இருக்கைகளை சரிசெய்து, சில பகுதிகளை எடுத்து விட்டு மெத்தையை சேர்ப்பதன் மூலம் உட்புறத்தை வசதியான இடமாக மாற்றுவதை காணமுடிகிறது.

    முடிவில் கார் படுக்கையில் 2 பேர் சவுகரியமாக உறங்கும் அளவுக்கு இடம் இருப்பதை காணமுடிகிறது. 82 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்ற இந்து வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    ×